காதலனை மறந்துவிட கூறி சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை

காதலனை மறந்துவிட கூறி சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை

காதலனை மறந்துவிட கூறி சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை
Published on

காதல் விவகாரத்தால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன். இவரது மகள் கல்பனா(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கல்பனாவும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீகர்(33) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்துள்ளனர். 

இந்தச் சூழலில் கல்பனா ஸ்ரீகரை காதலிப்பது கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவரது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி கல்பனா தனது காதலன் ஸ்ரீகர் வீட்டிற்கு நேரில் சென்று ‘உங்கள் மகன் ஸ்ரீகரும் நானும் காதலித்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி’ கூறியுள்ளார். ஆனால் ஸ்ரீகரின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்பனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மறுநாள் 11ஆம் தேதி கல்பனா வீட்டிற்கு வந்த ஸ்ரீகரின் உறவினர் கண்ணன் மற்றும் ரகு ஆகிய இருவரும் கல்பனாவின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் ஸ்ரீகரை கல்பனா தொந்தரவு செய்யக்கூடாது எனவும் இருவருக்கும் இடையே திருமணம் எதுவும் நடக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

இதனால் மனமுடைந்த கல்பனா, அவர்களின் கண் முன்னே தனி அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்பனாவின் பெற்றோர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின் விரைந்து வந்த காவல்துறையினர் கல்பனாவின் உடலை கைபற்றி பிரோத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கல்பனாவின் தந்தை ஆதிகேசவன் கல்பனாவின் தற்கொலை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் எனது மகள் தற்கொலைக்கு காரணமான  ஸ்ரீகர் மற்றும் அவரது குடும்பத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் விஷ்ணு காஞ்சி போலீசார் கல்பனாவின் காதலன் ஸ்ரீகர் மற்றும் அவரது உறவினர் ஸ்ரீராம், மாலா, கண்ணன், ரகு, உமா ஆகிய 6 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் தற்கொலைக்கு தூண்டியது எனப் பல பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரில்,கண்ணன் என்பவரை மட்டும் தற்போது கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கண்ணன் காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தற்போது இவர் அதிமுகவின் செயலாளராக இருந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் தலைமறைவாக உள்ள 5 பேரையும் 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கல்பனா தற்கொலை செய்து கொண்டு 5 நாட்கள் ஆகியும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருவதாக தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com