மாமியார் வீட்டிற்குச் சென்ற மகள் தற்கொலை? - சந்தேகம் எழுப்பும் தாய்
திருச்சி அருகே பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் சடையம்பட்டியை சேர்ந்த ஜீவிதாவிற்கும் கர்ணாம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே ஜீவிதா கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் குழந்தைக்கு முறையான வளர்ச்சி இல்லை என கருக்கலைப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தனது தாய் வீட்டில் இருந்த ஜீவிதா, நான்கு தினங்களுக்கு முன்பு மாமியார் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கிய ஜீவிதா அதிகாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் உறவினர்களால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஜீவிதா உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஜீவிதாவின் தாயார் தாமரை, தனது மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.