வறட்சி காரணமாக வறண்டு போன சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் மழை வேண்டி கண்ணகி யாகம் நடத்த முயன்ற பெண் ஒருவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலில், ஆளும் கட்சியனர் வருண யாகங்களும், எதிர் கட்சியினர் ஆர்பாட்டமும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் மழை பெய்ய வேண்டி, சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் சென்னை முகப்பேரை சேர்ந்த நர்மதா என்ற பெண், கையில் வேப்பலையுடன் வந்து, புழல் ஏரியின் உபரி நீர் திறக்கும் மதகின் மேல் கண்ணகி யாகம் செய்தார். அப்போது தகவல் அறிந்து வந்த செங்குன்றம் காவல் துறையினர், அனுமதி பெறாமல் புழல் ஏரியில் யாகம் நடத்த கூடாது எனக்கூறி, அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நர்மதா, தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பின்னர் தான் ஆறுகள் ஏரி குளங்கள் சூறையாடப்பட்டு பாலைவனம் போல் மாறிவிட்டதாகவும், தண்ணீருக்காக காலி குடத்துடன் போராட்டம் நடத்தும் மு.க.ஸ்டாலின், சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக் கூறும் அவரது கட்சியைச் சேர்ந்த துரைமுருகனை கண்டிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், மீண்டும் ஒரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முழுவதும் பாலைவனமாக ஆகிவிடும் என்பதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக விழித்துக்கொண்டு நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் மீனவர்களின் வீடுகள் இடிந்து விழுந்ததில் மீனவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வீட்டில் நண்டை விட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்த நர்மதா என்பது குறிப்பிடத்தக்கது.