போலீஸ் வாகனம் மோதி பெண் பரிதாப பலி : சிசிடிவி வீடியோ
கோவையில் காவல்துறை வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
கோவை மாநகர பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஐந்தாவது நாள் ஊர்வலமாக சென்று முத்தன்ன குளத்தில் கரைக்கப்படும் நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு காலை ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் வாகனம் அங்கு பாதுகாப்பு பணிக்காக காவலர்களை இறக்கிவிட்டு கிளம்பும்போது எதிர்பாராத நிலையில் நடந்து செல்லும் பெண் மீது மோதியது.
போலீஸ் வாகனத்தை அப்பெண் தாண்டி சென்ற போது, அதை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த விபத்தில் சற்று தூரம் தள்ளிச்சென்ற பெண் வாகனம் ஏறியதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்த பெண், பேரூர் பகுதியை சேர்ந்த கலா என்பது தெரியவந்தது. 55 வயதான அவர் ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு பொறிக்கடையில் வேலை பார்த்து வந்ததும், காலை வேலைக்கு செல்ல பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.