செய்தியாளர்: சுபாஷ்
மதுரை மாவட்டம் அனுப்பபட்டி கிராமத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்பட்டி கிராமத்தில் உள்ள காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயிலில் கொண்டாடப்படும். அந்த வகையில், நடப்பாண்டு 101 கிடா ஆடுகள் வெட்டப்பட்டு அத்துடன் 2 ஆயிரத்து 500 கிலோ அரிசி மூலம் உணவு சமைக்கப்பட்டது.
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திருவிழாவில் பெண்களுக்கு உணவு அருந்த கூட அனுமதியில்லை என்பது பல்லாண்டு வழக்கம். நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் மட்டுமின்றி அப்பகுதிகளை சேர்ந்த ஆண்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு கறிசோறை ஒன்றாக ஒரே பந்தியில் அமர்ந்து ருசித்தனர்.
இக்கோயில் திருவிழாவில் மற்றொரு வினோதம் ஒன்றும் உள்ளது. கறுப்பு கிடா மட்டுமே நேர்த்திக்கடனாக வழங்கப்படும். அனுப்பப்பட்டி, கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றக் கோரி கிடாக்களை நேர்த்திக்கடனாக செலுத்துவர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இரவு ஒரு மணிக்கு கிடா வெட்ட ஆரம்பித்து இரவு முழுவதும் சமையல் வேலைகள் நடந்த பிறகு பகலில் படையலிட்டு பின்னர் அனைவருக்கும் கறிச்சோறு பரிமாறப்பட்டது.