திண்டுக்கல் | ‘நிலா பெண்ணே’ - 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் வினோத திருவிழா!

வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வினோத வழிபாடு நடத்தி வரும் கிராம மக்கள். விரிவாக பார்க்கலாம்...
நிலா பெண் வழிபாட்டு முறை
நிலா பெண் வழிபாட்டு முறைpt desk

செய்தியாளர் - விஜயபாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ளது கோட்டூர் கிராமம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று பவுர்ணமி நாளில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி யாராவது ஒரு சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் பாரம்பரியமாக வினோத வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அப்படி இந்த ஆண்டு நிலா பெண்ணை தேர்வு செய்யும் சடங்குகளை கடந்த வாரம் கிராம மக்கள் தொடங்கினர். இதற்காக ஊரில் உள்ள 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை ஒன்று சேர்த்து மாசடச்சி அம்மன் கோவிலுக்கு அவர்கள் மூலம் பால் கொண்டு வந்தனர்.

நிலா பெண் வழிபாட்டு முறை
நிலா பெண் வழிபாட்டு முறைpt desk

இதைத் தொடர்ந்து 7 நாட்கள் தங்கள் வீடுகளில் இருந்து 15 சிறுமிகள் பல வகை சாதம் தயார் செய்து கோவிலுக்கு கொண்டு சென்றனர். ஒவ்வொரு நாள் இரவும் அந்த சாதத்தை ஒன்றாக சேர்த்து அதன் ஒரு பகுதியை கோவிலில் படைத்து விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட சிறுமி

இந்நிலையில் நேற்று முன்தினம், இரவு 8 மணியில் இருந்து தூங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில் தூங்காமல் இருந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஜெயாபிரகாஷ் - சுதா தம்பதியின் மகள் யாழினி என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து யாழினியை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு மக்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை அமர வைத்து ஆவாரம் பூக்களை பறித்து மாலையாக தொடுத்து அணிவித்து அலங்கரித்தனர்.

நிலா பெண் வழிபாட்டு முறை
நிலா பெண் வழிபாட்டு முறைpt desk

நிலா பெண்ணை வரவேற்ற கிராம மக்கள்

இதைத் தொடர்ந்து ஆவாரம் பூக்கள் நிறைந்த கூடையை சிறுமியின் தலையில் வைத்து அழைத்து வந்த ஊர் மக்கள், தாரை தப்பட்டை முழங்க நிலா பெண்ணை வரவேற்றனர். இதையடுத்து நிலா பெண்ணை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று அவரது தோழிகளுடன் அமர வைத்தனர். அங்கு ஆண்களும் பெண்களும் கும்மியடித்து, பாட்டுப் பாடி நிலா பெண்ணை சுற்றி வந்தனர். இந்நிலையில், மாசடச்சி அம்மன் கோவிலுக்கு நிலா பெண்ணை அழைத்து வந்து, அங்கு நிலா பெண்ணின் முறை மாமன்கள் ஒன்று சேர்ந்து பச்சை தென்னை ஓலையால் குடிசை அமைத்து அதில் நிலா பெண்ணை அமர வைத்தனர்.

கிணற்றில் விளக்கேற்றிய நிலா பெண்

அதனைத் தொடர்ந்து மாவிளக்கு எடுத்து வந்த பெண்கள், குடிசையில் இருந்த நிலா பெண்ணை வெளியே அழைத்து வந்தனர். ஆவாரம் பூ கூடையை தலையில் சுமந்து வந்த நிலா பெண், ஊர் எல்லையில் உள்ள கோவில் கிணற்றில் விளக்கேற்றினார். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வினோத வழிபாட்டினை நடத்தி வருவதாக கிராம மக்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com