பச்சிளம் குழந்தைகளை எடைபோட்டு, நிறம் பார்த்து விற்கும் செவிலியர் !

பச்சிளம் குழந்தைகளை எடைபோட்டு, நிறம் பார்த்து விற்கும் செவிலியர் !

பச்சிளம் குழந்தைகளை எடைபோட்டு, நிறம் பார்த்து விற்கும் செவிலியர் !
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் ஓய்வுப் பெற்ற செவிலியர் அமுதா என்பவர் பிறப்பு சான்றிதழுடன் பச்சிளம் குழந்தைகளை எடைபோட்டு, நிறம் பார்த்து விற்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது.

தற்போதைய நவீன உலகத்தில், பல்வேறு மருத்துவ வசதிகள் வந்த போதிலும் குழந்தை வரம் கிடைக்காமல் பெரும்பாலான தம்பதிகள் தவித்து வருகின்றனர். குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு, குழந்தைகளை சட்டப்படி தத்து எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால் அத்தனை கட்டுப்பாடுகளையும் நிறைவேற்றி குழந்தையை தத்து எடுப்பது என்பது நடுத்தர மக்களால் முடியாத காரியமாகவே உள்ளது. இதனால் சிலர் சட்டத்திற்கு புறம்பான வகையில் குழந்தைகளை தத்து எடுத்து வருகின்றனர். ஏழை வீட்டில் பிறக்கும் குழந்தைகள், தவறான நடத்தையால் பிறக்கும் குழந்தைகளை இடைத்தரகர்கள் விலைக்கு வாங்கி குழந்தை இல்லாதவர்களிடம் விலைக்கு விற்பது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் செவிலியர் அமுதா. விருப்ப ஓய்வு பெற்ற அமுதா 30 வருடங்களாக இடைத்தரகராக செயல்பட்டு குழந்தைகளை வாங்கியும் விற்றும் வருகிறார். மேலும் கடந்த 30 வருடங்களாக ராசிபுரத்தில் தங்கு தடையின்றி இந்த விற்பனை ஜோராக நடந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளின் கலர், எடை ஆகியவைதான் அதன் விலையை நிர்ணயிக்கின்றன. ஆண் குழந்தை என்றால் குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் வரையிலும், பெண் குழந்தை என்றால் ரூ.3 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரூ. 70 ஆயிரம் கொடுத்தால், ராசிபுரம் நகராட்சியில் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழும் வாங்கி தரப்படுகிறது. இதற்காக ஒரு பெரிய கும்பலே செயல்பட்டு வருகிறது. 

இந்தச் சூழலில் தரகராக செயல்படும் செவிலியர் அமுதா ஒரு தம்பதிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்  “30 ஆயிரம் ரூபாய் கொடுத்து குழந்தையை முன்பதிவு செய்து கொண்டு குழந்தை வந்ததும் நேரில் பார்த்து எடுத்துக்கொள்ளலாம்” என அந்த பெண் கூறுகிறார். இந்த ஆடியோ ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குழந்தை விற்பனை செய்யும் இந்த கும்பல் பல இடங்களில், குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளை திருடி வந்து விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பல்வேறு தொண்டு நிறுவனங்களில் நட்பு வைத்துள்ள இந்த குழந்தை கடத்தல் கும்பல், அவர்கள் மூலம் குழந்தைகள் இருப்பதையும், குழந்தை வேண்டிவரும் தம்பதியரையும் தெரிந்து கொண்டு குழந்தை வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். குழந்தை வேண்டி வரும் தம்பதிகள் யாரும் புகார் தெரிவிக்காததால் ராசிபுரத்தில் குழந்தை வியாபாரம் தங்கு தடையின்றி நடைப்பெற்று வருகிறது. மேலும் காவல்துறையினர் விசாரித்தால் இந்த கும்பல் பற்றி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com