பெங்களூரு நகருக்கு குடிநீர் எடுக்கும் வகையிலும், விவசாய நிலங்களை அதிகரிக்கும் வகையிலும் காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக முதலமைச்சரின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிராகரித்து விட்டார். டெல்லி சென்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், தமிழ்நாடு அரசிடம் தெரிவிக்காமல் கர்நாடகாவுக்கு மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள், மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.