பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவர் கொலை
புதுக்கோட்டையில் பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை இரு இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது உறவுப் பெண் ஒருவரை காயாம்புஞ்சையை சேர்ந்த இளைஞர்கள் தினேஷ், சுரேந்திரன் ஆகியோர் கேலி செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக சுப்பிரமணியன் கடந்த 15 நாட்களுக்கு முன் பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காயாம்புஞ்சை பகுதியில் சுப்பிரமணியனுக்கும், அந்த இளைஞர்கள் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் தினேஷ், சுரேந்திரன் ஆகிய இருவரும் சுப்பிரமணியனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொன்னமராவதி போலீசார் தினேஷ் சுரேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியத்தின் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்ததற்காக சுப்பிரமணியனை கொலை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.