20 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பொருட்கள் நூதன மோசடி - ஒருவர் கைது
ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகளிடம் ரூ.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை பெற்று கொண்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் வில்ரசம்பட்டியை சேர்ந்தவர் பிரியவர்ஷினி. இவர் அப்பகுதியில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இதேபோல சித்தோட்டை சேர்ந்த சந்திரன் என்பவரும் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறார். இவர்களது நிறுவனத்தில் கடந்த ஆண்டு வந்து பேசிய திண்டலை சேர்ந்த அருண் என்பவர், தான் புதிய ஆயத்த ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார். அத்துடன் ஒரு மாதத்தில் ஜவுளி ரகங்களுக்கான பணத்தை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய பிரியவர்ஷினியும், சந்திரனும் ரூ.20 லட்சம் மதிப்பிலான துணிகளை அருணிடம் வழங்கியுள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் பணம் தராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பிரியவர்ஷினி, ஈரோடு மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அருணை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.