நடைபயிற்சி சென்ற முதியவர் கடத்தல் - உளவுத்துறைபோல் நடித்து நகை பறிப்பு
சென்னையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதியவரை கடத்தி உளவுத்துறை என ஒரு கும்பல் நகையை திருடிச்சென்றுள்ளது.
சென்னையில் உள்ள மயிலாப்பூர், கபாலி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (70). இவர் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் இன்று நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர், பரமசிவத்திடம் கட்டட வேலைக்கு ஆட்கள் வேண்டும் என அழைத்துச்சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு, ஆட்டோவில் இருந்த நபர் தான் உளவுத்துறை காவலர் என கூறியுள்ளார்.
அத்துடன் பரமசிவத்தின் மோதிரத்தின் மோதிரத்தை கழட்டுமாறு கூறியுள்ளார். பரமசிவம் ஏன்? என்று கேட்க, அந்த மோதிரத்தில் ரகசிய எண் இருக்கும் என்றும், அதை வைத்து அது திருட்டு மோதிரமா? இல்லையா? என்பதை கண்டறியப்போவதாக மிரட்டிப் பறித்துள்ளனர். ஆட்டோ தி.நகர் ஹபிபுல்லா சாலை அருகே சென்றபோது, கத்தியை காட்டி மிரட்டி பரமசிவத்தை கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக பரமசிவம் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.