வசைபாடிய பொது மக்கள் ! பிரச்சனையை தீர்த்த காவல் துறையினர்

வசைபாடிய பொது மக்கள் ! பிரச்சனையை தீர்த்த காவல் துறையினர்
வசைபாடிய பொது மக்கள் ! பிரச்சனையை தீர்த்த காவல் துறையினர்

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் சந்திப்பு சாலையில் தொடர்ந்து சாலை விபத்துகளை நடந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் களத்தில் இறங்கிய போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பூந்தமல்லி - கொல்கத்தா செல்லும் சாலை என நான்கு சாலைகளின் சந்திப்பு பகுதியாக இருப்பது சென்னீர்குப்பம் சாலை சந்திப்பு. இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக  மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் பலமுறை போராட்டம் நடத்தியும் மற்றும் கோரிக்கை மனு கொடுத்தும்  எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுவரையிலும் சாலை குண்டும், குழியுமாக காட்சி தருவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 தினங்களில் மட்டும் நடந்து சென்ற ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர், மோட்டார்சைக்கிளில் அமர்ந்து சென்ற தாய் என அடுத்தடுத்த தினங்களில் சாலை விபத்தில் இறந்துள்ளனர். 

இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் இந்த சாலையை கண்டு கொள்வதே இல்லை, மேலும் இந்த நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலை என்று ஏமாற்றி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.30லட்சத்திற்கும் மேல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு வசூலிக்கப்படும் பணம் இந்த சாலையை சீரமைக்க பயன்படுத்தபடுவதில்லை. இந்த சாலையை சீரமைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவமும் நடைபெற்றது. ஆனால் இதுவரை எந்தவித பயனும் இல்லாததால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரை திட்டியபடி செல்கின்றனர். 

இதனால் மனம் உடைந்து போன போலீசார் லாரிகள் மூலம் கற்கள், ஜல்லி, மணலை கொண்டு வந்து குண்டும், குழியுமாக இருந்த சாலைகளில் கொட்டி சாலையை சரி செய்யும் பனியில் ஈடுபட்டனர். அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் பூந்தமல்லி போக்குவரத்து ஆய்வாளர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது. தற்போது அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை கண்டு வாழ்த்து தெரிவித்து விட்டு செல்கின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com