வீடுகட்டி தருவதாக 50 லட்சம் மோசடி - கட்டுமான நிறுவனம் மீது வழக்குப் பதிவு
தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துபாயில் பல வருடங்களாக சேல்ஸ் மேலாளராக வேலை பார்த்து வந்தவர் ராஜிவ். இவருக்கு தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் சொந்தமாக ஒரு இடம் இருந்துள்ளது. அங்கே சொந்த வீடு கட்டுவதற்கு இவர் முடிவெடுத்துள்ளார். ஆகவே தான் சேமித்து வைத்திருந்த பணத்துடன் பேங்க் மூலம் கடன் பெற்று ஒரு தொகையை வீட்டில் வைத்துள்ளார். தென்காசி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்துவிட்டு அவர்களிடம் வீடு கட்டித்தருமாறு கேட்டுள்ளார்.
அவர்களின் அணுகுமுறையில் இவருக்கு நம்பிக்கை வரவே அவர்களிடம் வீடுகட்டித் தர ரூபாய் 93 லட்சத்தை ஒப்பந்தமாக பேசி முடித்துள்ளார். வீட்டை 10 மாதத்திற்குள் முடித்து தருவதாக அவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தந்துள்ளனர். அதனடிப்படையில் அந்தத் தனியார் கட்டுமான நிறுவனம் இவரிடமிருந்து சுமார் 70 லட்சம் வரை பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்களையும் அவர் வைத்துள்ளதாக தெரிகிறது.
இதுவரை வெறும் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகள் மட்டுமே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. துபாயிலிருந்து ராஜிவ், இதற்கான பணத்தை வங்கி மூலம் காசோலையாக உரியவர்களுக்கு அனுப்பி உள்ளார். ஆனால் துபாயிலிருந்து விடுமுறையின்போது வந்து ராஜிவ் பார்த்தபோதுவேலைகள் எதுவும் நடைபெறாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவன அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். அவருக்கு உரிய பதில் வரவில்லை. இதனை நேரில் கேட்க போனபோது அவர்கள் ஆள் வைத்து அவரை அடித்ததாக கூறப்படுகிறது. ஆகவே அவர் தன்னிடமிருந்து 70 லட்சம் வரை பெற்றுக்கொண்டு வெறும் 25 லட்சம் மதிப்பிலேயே வேலையை முடித்து தந்ததாகவும் மீதி பணத்தை கேட்டால் தன்னை மிரட்டுவதாகவும் கூறி ராஜிவ் நெல்லையில் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் அந்தக் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர் மீது ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.