பூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
பூம்புகார் கடலில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்த கல்லூரி மாணவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சீர்காழி அருகே உள்ள பூம்புகார் சுற்றுலா தலத்திற்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மைத்துறை மாணவர்கள் சிலர் சுற்றுலா சென்றுள்ளனர். அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்த பின்னர் அவர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பெரும் அலையில் சிக்கி வேளாண்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் பண்ருட்டியை சேர்ந்த குபேரன் (20) என்பவர் கடலில் மூழ்கி உயிருக்கு போராடி உள்ளார்.
உடனே சக நண்பர்கள் கடலில் இறங்கி, நீண்ட நேரம் போராடி அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் குபேரனை சோதித்து பார்த்த போது கடல்நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த பூம்புகார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் இறந்தது குறித்து கடலோரக் காவல்படையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடல்பகுதியில் இறங்கி குளிப்பது ஆபத்து என காவல்துறை அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும் சுற்றுலாவாசிகள் இதனை பொருட்படுத்தாமல் கடலில் இறங்கி அதிக தூரம் சென்று குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் உயிரிழப்புகள் என்பது தொடர்கதையாகி உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.