தருமபுரி அருகே விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வெங்கட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் மகன் பூவரசன், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். தீபாவளி பண்டிகைக்காக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இதனால் வீட்டிலிருந்து சிறுவன் நண்பர்களோடு நீச்சல் கற்றுக் கொள்ள, அருகில் உள்ள விவசாயி கிணற்றுக்கு சென்றள்ளார்.
அப்பொழுது கிணற்றில் குதித்து கொண்டிருந்தபோது, திடீரென பூவரசன் நீரில் மூழ்கி, தத்தளித்துள்ளார். இதனை கண்ட நண்பர்கள் பூவரசன் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் பூவரசன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தருமபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அதியமான் கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகை நாளில் சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.