திருச்சி : தின்பண்டம் எனக் கருதி ஜெலட்டின் குச்சியைக் கடித்த சிறுவன் உயிரிழப்பு
திருச்சி அருகே தின்பண்டம் என்று நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மேற்கு அலகரை கிராமத்தை சேர்ந்த கங்காதரன் என்பவர், தனது சகோதரர் பூபதி, உறவினர்கள் மோகன்ராஜ், செல்வராஜ் ஆகியோர் உதவியுடன் பாப்பாபட்டியில் இயங்கும் கல்குவாரியில் 4 ஜெலட்டின் குச்சிகளை சட்டவிரோதமாக வாங்கியுள்ளார். அவற்றைக் கொண்டு, அவர்கள் திங்களன்று மணமேடு காவிரி ஆற்றில் வெடிக்க வைத்து மீன் பிடித்துள்ளனர்.
மீதமுள்ள ஒரு ஜெலட்டின் குச்சியை கங்காதரன் தனது வீட்டில் கட்டிலில் வைத்துள்ளார். அங்கு சென்ற பூபதியின் 6 வயது மகன் விஷ்ணு தேவ், ஜெலட்டின் குச்சியை தின்பண்டம் என நினைத்து கடித்துள்ளான். அப்போது ஜெலட்டின் குச்சி வெடித்ததில் சிறுவனின் முகம் படுகாயமடைந்தது. இதையடுத்து முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே, சிறுவன் விஷ்ணு தேவ் உயிரிழந்தான்.
இதையறிந்து உடலை வீட்டுக்கு எடுத்து வந்த அவர்கள், சடலத்தை எரித்துள்ளனர். தகவலறிந்த அலகரை வி.ஏ.ஓ. ரெஜினா மேரி அளித்த புகாரின் பேரில், கங்காதரன், மோகன்ராஜ், செல்வராஜ் ஆகிய மூன்று பேரை தொட்டியம் காவல் துறையினர் கைது செய்தனர்.

