\
மர்மமாக இறந்த ‘பெண் குழந்தை’ - உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

மர்மமாக இறந்த ‘பெண் குழந்தை’ - உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

மர்மமாக இறந்த ‘பெண் குழந்தை’ - உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
Published on

ஒசூர் அருகே மர்மமாக இறந்த கைக்குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சசிகலா (23). இவர்களுக்கு மூன்று வயதில் ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 23ஆம் தேதி சானமாவு கிராமத்திற்கு வந்த செவிலியர் ரஜினி கார்த்திகா குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். அடுத்த நாள் காலை குழந்தை மர்மமான முறையில் இறந்தது. 

டாக்டர்கள் குழு விசாரணை நடத்தி, தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இறக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் குழந்தையை பெற்றோர் அடக்கம் செய்தனர். இந்நிலையில், உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி உதயகுமார், குழந்தை இறப்பில் மர்மம் உள்ளதாகவும், 45 நாட்களில் போடவேண்டிய தடுப்பூசி 40 நாட்களில் போட்டதால் உயிரிழப்பு எனவும் நேற்று முன்தினம் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதனால், வருவாய்த்துறை மற்றும் போலீசார் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குழந்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும், மேலும் இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் மற்றும் சூளகிரி வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com