கிருஷ்ணகிரியில் நீதிமன்ற வளாகம் எதிரில், பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை மினி டெம்போவில் விட்டு சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரில் குடியிருந்து வருபவர் தவுலத்பாஷா. இவர் தனக்கு சொந்தமான மினி டெம்போவை அங்குள்ள காலி இடத்தில் நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை அந்த டெம்போவை எடுக்க சென்றுள்ளார். அப்போது டெம்போவின் பின்புறம் இருந்து குழந்தை அழுவது போல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து டெம்போவின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கு, பிறந்த 10 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்ட நிலையில் அழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்தக் குழந்தையை மீட்டு, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ள பெண் குழந்தையை ஓசூரில் உள்ள ஆனந்த் ஆசிரமத்தில் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்தனர். மேலும் இந்தக் குழந்தையை விட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்தும், எதற்காக விட்டு சென்றனர் என்பது குறித்தும் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.