உசிலம்பட்டியில் பிறந்து சிலமணி நேரமே ஆன சிசுவை சாலையோரம் வீசிச் சென்ற அவலம் நடந்துள்ளது. நாய்கள் கடித்து சிதைந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் ரத்தக் கரையுடன் கிடந்த துணியை நாய்கள் கடித்து தின்று கொண்டிருந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல்நிலைய போலீசார் நாய்களிடமிருந்து ரத்தக் கரையுடன் கிடந்த துணியை எடுத்து பார்த்தனர். அப்போது அதில், பிறந்து சிலமணி நேரமே ஆன சிசுவை நாய்கள் கடித்து சிதைத்திருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சிதைந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிசுவை சாலையோரம் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.