என்ன கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில்! டாக்டர் பட்டம் பெற்ற 2 வயது சிறுவன்

என்ன கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில்! டாக்டர் பட்டம் பெற்ற 2 வயது சிறுவன்
என்ன கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில்! டாக்டர் பட்டம் பெற்ற 2 வயது சிறுவன்

அதீத நினைவாற்றலால் 2 வயதில் டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சிறுவன்... யார் அவர் அப்படி என்ன செய்தார். இங்கு விரிவாக பார்க்கலாம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் - சத்யா தம்பதியின் 2 வயது மகன் ஆத்விக்குமார். இவன் தனது 1 வயது முதல் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை நினைவில் வைத்து மீண்டும் நினைவுபடுத்திக் கூறும் திறமை கொண்டவனாக இருந்துள்ளான்.

இதைக் கண்ட சிறுவனின் பெற்றோர் அவனின் நினைவாற்றலை மேம்படுத்தும் விதமாக 1 வயது முதல் அறிவு சார்ந்த தகவல்களை வரைபடமாக காட்டி அதனை நினைவு கொள்ளும் பயிற்சியை வழங்கியுள்ளனர். இதனால் பல்வேறு வரைபடங்களில் உள்ள தகவல்களை எப்போது கேட்டாலும் சொல்லும் திறன் கொண்டவனாக மாறியதோடு ஒன்றரை வயது முதல் 2 வயது வரை 6 மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளான்.

ஒரு வயது 7 மாதங்கள் இருந்தபோது பல்வேறு நாட்டுக் கொடிகள், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களை பார்த்து பெயர்களை சொல்வது, வாகனங்களின் லோகோக்கள், இடங்களின் பெயர்கள், விலங்குகள், பறவைகள், உணவுப் பொருட்கள் என பெயர்களை சரியாக கூறியதால் வேர்ல்டு ரெக்கார்டு சான்றிதழ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ், கலாம் உலக சாதனை, யூனிவர்செல் புக் ஆப் ரிக்கார்டு, இந்தியா புக் ஆப் ரிக்கார்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளான் சிறுவன் ஆத்விக் குமார்.

இந்நிலையில், கடந்த மாதம் 100 வகையான படங்கள், 5 அரசியல் தலைவர்கள், 6 தேசிய தலைவர்கள், 25 வாகனங்களின் லோகோக்கள், 10 நல்ல பழக்கங்கள், 5 சுதந்திர போராட்ட வீரர்கள், 28 விலங்குகள், 15 பறவைகள், 30 உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பெயர்களை 3 நிமிடம் 32 வினாடிகளில் கூறி சாதனை படைத்தார். இதற்காக ஜாக்கி புக் ஆப் டேலண்ட் சான்றிதழ் பெற்றுள்ளார்.

சிறு வயதில் அதீத நினைவாற்றல் கொண்ட இச்சிறுவனின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக ரிக்கார்டு பிரேக்கிங் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இச்சிறுவனின் சாதனை கேட்டு வியப்படைந்த அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சிறுவனின் நினைவாற்றல் அவனது கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கும் பெற்றோர் கலெக்டர் ஆக வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை நிறைவேற்றவும் தயாராக உள்ளதாக கூறினர்.

செய்தியாளர் கணேஷ்குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com