மருத்துவ பரிசோதனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி
கடலூர் மாவட்டத்தில் 9 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 67 சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் கடலூரில் 100-க்கும் அதிகமானோர் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவில் 9 பேருக்கு டெங்கு உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீடுகள் அருகே மழைநீரை தேங்கவிட வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குடிநீர் உள்ள பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும் என்றும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை நாடவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.