”முதல்வருக்கு இனி முழு ஓய்வு; வாக்கு சதவீத அதிகரிப்பிற்கு தவெக காரணம்” - நிர்மல் குமார் விளக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நேற்றைய முன்தினம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக இத்தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்த வாக்குப்பதிவு சதவீத அதிகரிப்புக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர்-ஐ காரணமாக கூறிவரும் வேளையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினாலேயே வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதாக தவெகவினரால் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. எனினும், திமுக ஆட்சியை மீண்டும் தக்க வைக்குமா? அதிமுக ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வாக்கு எண்ணிக்கை நாளான மே-4 ம் தேதி தெரியவரும்.
இந்த சூழலில் தான், இன்று சென்னை விமான நிலையத்தில், தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வித்தியாசமானத் தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக நிர்வாகிகள் தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடந்தி இருக்கின்றனர். குறிப்பாக, தோல்வி பயத்தால் திமுக பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டது. மேலும், பேருந்து வசதிகள் திட்டமிட்டு முறையாக செயல்படுத்தப்படாமல், போக்குவரத்து துறை அதிகாரிகள் திமுகவுக்கு துணையாக இருந்து இருக்கின்றனர். மேலும், 20 லட்சம் பேரை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தி திமுக கொள்கை பரப்பு செயலாளர் போல் அதிகாரிகள் நடந்து கொண்டனர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஒரு வாரகால ஓய்வுக்காக இன்று கொடைக்கானல் சென்றிருக்கும் நிலையில் அதுகுறித்துப் பேசிய அவர், தேர்தல் பரப்புரை முடிந்து சுற்றுலா செல்வது தான் திமுக குடும்பத்தின் வழக்கமாக இருக்கிறது என்றும், கொடைக்கானலுக்கு முதல்வர் ஓய்வுக்காக சென்றுள்ளார்; இனிமேல் அவருக்கு முழு ஓய்வுதான் என்றும் கூறினார்.
தொடர்ந்து, திமுகவை பேசிய அளவிற்கு பாஜகவை தவெக ஏன் விமர்சிக்கவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஜய் இல்லை. சட்டமன்ற தேர்தல் என்பதால் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்பாக பேச வேண்டி இருந்தது. தமிழ்நாட்டில், சிறு வாக்கு வங்கி கூட இல்லாத பாஜகவை எதிர்க்கவில்லை என கேட்பது நியாயமாக இல்லை என பதில் அளித்தார். கடைசியாக, தேர்தலில் வாக்குசதவீதம் அதிகரித்து இருப்பதற்கு தவெக அரசியல் வருகை தான் காரணம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
