கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், டெங்கு காய்ச்சலுக்கு 8 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தாம்பட்டி அப்பாவு நகரைச் சேர்ந்தவர் கவிதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஏற்பட்டிருப்பது டெங்கு காய்ச்சல் என்று மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டதால்,8 மாத கர்ப்பிணியான கவிதாவை அவரது உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இன்று அதிகாலை காய்ச்சல் அதிகமாகி கவிதாவிற்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. பல முறை சொல்லியும் மருத்துவர்கள் வந்து பார்க்காததால், கவிதாவும் வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழந்தனர். மேலும் தருமபுரி அரசு மருத்துவமனையின் அலட்சியமே கவிதாவின் மரணத்திற்கு காரணம் என்று அவரின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.