முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்படுவதுண்டு. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலி மருத்துவர்களை பிடிக்க அனைத்து காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய தனிப்படையினர் இணைந்து மாவட்டம் முழுவதிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதில், கந்திலி பகுதியில் வேலு, ஜோலார்பேட்டையில் மனோரஞ்சிதம், குருசிலாப்பட்டில் பழனி, நாட்றம்பள்ளியில் அருண், ஆலங்காயத்தில் தனபால், உமராபாத்தில் இம்மானுவேல் மற்றும் ஜெயபால் ஆகிய 7 பேர் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது கண்டறியப்பட்டது. ஏழு பேரையும் அதிரடியாக கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் மருத்துவம் பார்க்க வைத்திருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.