தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து இதுவரை பதிவான மழையின் அளவு இயல்பைவிட 19 சதவிகிதம் குறைவு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை இயல்பாக பெய்யும் மழையின் அளவு 31 புள்ளி 6 செண்டி மீட்டராகும். ஆனால் 25 புள்ளி 5 சென்டி மீட்டர் அளவே மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 19 சதவிகிதம் குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் 55 புள்ளி 8 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில், 22 புள்ளி 5 சென்டி மீட்டர் மழைதான் பெய்துள்ளது.
சென்னையில் இதுவரை மழைப்பொழிவு இயல்பைவிட 60 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதேபோல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மழைப்பொழிவு இயல்பைவிட 60 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மழைப்பொழிவு இயல்பை விட 27 சதவிகிதமும், தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் முறையே 12, 10 மற்றும் 7 சதவிகிதம் கூடுதலாகவும் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

