திருப்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து : 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே நடந்த சாலை விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்திலிருந்து அவினாசிக்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவிநாசி அருகே பழங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்ற டவேரா கார் ஒன்று லாரியின் பின்னால் வந்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 மாணவர்கள் மற்றும் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் காரில் சுற்றுலாவுக்கு சென்ற மாணவர்கள் சேலம் விநாயகா பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.