ஸ்தம்பிக்கும் மதுரை: காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தை தொடங்கிய 6,000 தூய்மைப் பணியாளர்கள்

ஸ்தம்பிக்கும் மதுரை: காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தை தொடங்கிய 6,000 தூய்மைப் பணியாளர்கள்
ஸ்தம்பிக்கும் மதுரை: காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தை தொடங்கிய 6,000 தூய்மைப் பணியாளர்கள்

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பணிபுரியும் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவை சார்ந்த 6 ஆயிரம் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறத்தப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அவர்களின் வேலை நிறுத்தத்தினால் குடிநீர் விநியோகம், தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 4,500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் & 1,500 க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும்

* தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும்

* கொரோனா நிவாரண தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும்

* தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும்

* விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்

உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் என 3 சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் ஒன்றிணைத்து மதுரை மேலவாசலில் உள்ள தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பாக வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்பு குழு மற்றும் மேயர் என 3 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை நடந்திருந்தது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்தது. அதைத்தொடர்ந்து இன்று அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதனிடையே தொழிலாளர்களின் 28 கோரிக்கைகளில் 24 கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைந்து நிறைவேற்றப்படும் எனவும் மீதியுள்ள 4 கோரிக்கைகள் மாநில அரசுக்குட்பட்டவை என்பதால் அதனை நிறதுவேற்றவும் பரிசீலனை செய்துள்ளதாகவும் மாநகராட்சி மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தினால் மதுரை மாநகரத்தில் குடிநீர் விநியோகம், தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com