திருத்தணி | அரசுப் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து.. 5 பேர் உயிரிழப்பு! 29 பேர் படுகாயம்!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த டி.சி.கண்டிகை பகுதியில் உள்ள கல்குவாரிக்கு டிப்பர் லாரி ஒன்றுசென்று கொண்டிருந்தது. கே.ஜி.கண்டிகை என்ற இடத்தில் செல்லும் போது எதிரே ஸ்ரீகாளிகாபுரம் பகுதியிலிருந்து திருத்தணி நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது வேகமாக சென்ற டிப்பர் லாரி அரசு பேருந்து மீது நேருக்கு நேராக பலமாக மோதியதால் விபத்து ஏற்பட்டது.
இதில் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில், பேருந்தில் இருந்த 16 ஆண்கள், 13 பெண்கள் என 29 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
5 பேர் மரணம்..
விபத்து குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் நசுங்கி பலியான அம்மையார்குப்பத்தை சேர்ந்த மகேஷ், முரளி, பாண்டுரங்கன், சிவானந்தம் உள்பட 5 பேர் உடலைக் கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தனுஷ், சுந்தரம், அரசு ஆகியோர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் லாரி டிரைவர் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுனர் இருவரும் தப்பி ஓடியதால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.