சிறு வியாபாரிகளுக்கு 5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் - விக்கிரமராஜா...
தமிழகத்தில் உள்ள சிறு வியாபாரிகளை ஊக்கப்படுத்த மத்திய மாநில அரசுகள் ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்கிரமராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார் குப்பத்தைச் சேர்ந்தவர் மறைந்த சமூக சேவகர் பி.வி.முருகேசனார். இவரது படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வணிகர்களின் வாழ்வாதாரம் கடுமையாக முடங்கியுள்ளது. சிறு வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியவர் தொடர்ந்து.
சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை பணியாளர்கள் போன்று பொதுமக்கள் சேவையில் ஈடுபட்ட வணிகர்களில் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த வியாபாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக அரசை முன்வர வேண்டும். மாவட்ட அளவில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவில் பேருந்துகள் இயக்கினால் மட்டுமே வணிகம் பெருகும். அதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
வெளிநாட்டு வணிகத்தை ஊக்கப்படுத்துவதை தவிர்த்து உள்நாட்டு வணிகத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக முடங்கியுள்ள நிலையில் டோல்கேட் கட்டண உயர்வை கைவிட வேண்டும். நடைமுறையில் இல்லாத டோல் கேட்டுகள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பேசினார்.