பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம், பத்தமடையில் கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் தனது குடும்பத்தினருடன் காரில் நேற்று இரவு அம்பாசமுத்திரம் சென்று கொண்டிருந்தார். அப்போது பத்தமடை பகுதியில் செல்லும்போது, பாபநாசத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்த பேருந்து, கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாடசாமி, சேவியர், நிக்கோலஸ், மித்திரன், பன்னீர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அருள்மணி என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.