\
சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்பு
Published on

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 5 கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா இன்று பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

ஜனவரி 17 ஆம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஒன்பது பேரை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது.

மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த பி.வடமலை, ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய மூவரையும், வழக்கறிஞர்களாக உள்ள வி.லக்ஷ்மி நாராயணன், எல்.விக்டோரியா கௌரி, பி.பி.பாலாஜி, ஆர்.நீலகண்டன், கே.கே.ராமகிருஷ்ணன், ஜான் சத்யன் ஆகிய 6 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கௌரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு மேல் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இவர்களின் பதவி ஏற்பு மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்து, காலியிடங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைய உள்ளது.

கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படாத மாவட்ட நீதிபதி பி.வடமலை மற்றும் வழக்கறிஞர்கள் வி.லக்ஷ்மி நாராயணன், ஆர்.நீலகண்டன், ஜான்சத்யன் ஆகியோரின் பரிந்துரைகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com