ஆர்.கே.நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் மனு தாக்கல் செய்துள்ளார். மருதுகணேஷின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் ஆர்.கே.நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் இருப்பதாக முறையிட்டார். இதனை மனுவாக தாக்கல் செய்ய அனுமதித்து வேறு அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் 45,000க்கும் மேலான போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் போலி வாக்காளர்கள் குறித்து திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.