நான்கு ஆண்டுகள் சென்னை மாநகர ஆணையராக பணியாற்றிய ஏகே விஸ்வநாதன் என்னென்ன பணிகளை செய்தார் என்பது குறித்து இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
ஈரோட்டைச் சேர்ந்த இவர் பிஏ, பிஎல், எம்எல் பட்டங்களைப் பெற்று ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டமும் பெற்றவர். கடந்த 2017- ஆம் ஆண்டு சென்னை காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற ஏ.கே.விஸ்வநாதன் நான்கு ஆண்டுகள் சென்னை காவல்துறையில் ஆணையராக பணியாற்றியுள்ளார். 1990ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் சேர்ந்த விஸ்வநாதன் ஏஎஸ்பியாக பதவியை தொடங்கி கோவை போலீஸ் கமிஷனர், சென்னை காவல்துறை கூடுதல் கமிஷனர், ஊர்க்காவல் படை ஏடிஜிபி ஆகிய முக்கிய பதவிகளை வகித்தார்.
போக்குவரத்தில் காவல்துறையில் பணமில்லா அபராதம் வசூலிக்கும் முறை (இ-சலான். ஸ்வைப் முறையில் பணத்தைச் செலுத்துதல்) மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. சென்னை நகரில் சுமார் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியதன் மூலம் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, உள்ளிட்டக் குற்றச்சம்பவங்கள் எளிதில் கட்டுப்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கை அவரது பணி காலத்தில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.பள்ளிக்கரணையில் ஐடி ஊழியர் லாவண்யாவை தாக்கி கொள்ளையடித்த கொள்ளையர்களை கைது செய்தது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட நபருக்கு மனதளவில் ஆலோசனைகளை வழங்கி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்.
தமிழகத்தில் புதியதாக துவங்கப்பட்ட பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப்பிரிவு சென்னையில் கவனித்தக்கதாக மாறியிருப்பதில் இவரது பங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. “காவலன் செயலி” மூலம் பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக சீன அதிபர் சென்னைக்கு வருகை தந்த போது, இரு நாட்டு தலைவர்களின் பாதுகாப்பிற்காக இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரிய அளவில் கவனம் பெற்றன. சென்னை காவல்துறைக்கு மத்திய அரசு விருதும் கிடைத்தது.
இறுதியாக கொரோனா தடுப்புப்பணியாக புதிய செயலிகள், ட்ரோன்கள், காவலர்களுக்கு முககவசங்களை காவலரே தயாரிப்பது, கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு ஊக்கம் அளிப்பது உள்ளிட்டவை கொரோனா பரவல் காலக்கட்டத்தில் அதிக கவனம் பெற்றவை. இவர் கமிஷனராக இருந்த சமயத்தில் சென்னையில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசு அளித்து ஊக்கப்படுத்துவது, கடமையில் தவறும் காவல் அதிகாரிகளை உடனடியாக தண்டிப்பது, காவல்துறையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்றே ஆறுதல் அளிப்பது போன்றவை இவரது நற்பண்புகளாக சொல்லப்படுகிறது