திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் என்ற பகுதியில் இருந்து கேரள மாநிலம் மூணாறு லட்சுமி எஸ்டேட் பகுதிக்கு திருமணத்திற்காக 21 பேர் வேனில் சென்றுள்ளனர். அப்போது போடிமெட்டு மலைச் சாலையில் உள்ள தோண்டிமலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன், 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இதில் சுசீந்திரன் (8), சுதா, வள்ளி, பெருமாள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாந்தாம்பாறை போலீசார், படுகாயமடைந்த 17 பேரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 குழந்தைகள், 8 பெண்கள் மற்றும் 4 ஆண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்ட போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்காக கேரள மாநிலம் அடிமாலி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சாந்தாம்பாறை மற்றும் தேனி கானாவிலக்கு போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.