5 ஐஜிக்களுக்கு ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு: 35 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்
காவல் அதிகாரிகள் 35 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 5 ஐஜிக்களுக்கு ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல், ரயில்வே ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் சரக டிஐஜியாக உள்ள தமிழ்சந்திரனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையராக உள்ள சஞ்சய் மாத்தூர், சிபிசிஐடி ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஐஜியாக உள்ள மகேஷ் குமார் அகர்வால், மதுரை மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி அமித் குமார் சிங்கிற்கு, டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்பி அஸ்வின் கோட்னிசுக்கும், டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவரும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த வி பாலகிருஷ்ணன், டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, விழுப்புரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியிலிருந்த அனிசா ஹூசைன், சென்னைப் பெருநகர காவல்துறை தலைமையிட டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தேன்மொழி, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நவீனமயமாக்கல்துறையின் ஐஜியாக இருந்த கருணாசாகருக்கு, ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர், நிறுவனமாக்கல் துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னியபெருமாள் ஆகியோருக்கும் ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.