ஆந்திர சிறைகளில் பல ஆண்டுகளாக தவிக்கும் 3000 தமிழர்கள்..!
செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3,000 பேர் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது மக்கள் கண்காணிப்பகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஆந்திராவில் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சட்டவிரோதமாக செம்மரம் வெட்டுவதால் இவர்களை கைது செய்வதாக ஆந்திர போலீசார் இதற்கு காரணம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 3,000 பேர் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது மக்கள் கண்காணிப்பகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் நடத்திய அந்த ஆய்வில், எவ்வித விசாரணையும், ஜாமீனும் இன்றி ஆந்திராவில் 3 ஆயிரம் தமிழர்கள் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பலர் 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்ற சந்தேகத்தில், போதிய ஆதாரங்கள் இன்றி பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் கண்காணிப்பகத்தின் வழக்கறிஞர் ரவிக்குமார் கூறியுள்ளார்.