குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் - தவறி விழுந்து 30 வயது இளைஞர் உயிரிழப்பு

குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் - தவறி விழுந்து 30 வயது இளைஞர் உயிரிழப்பு
குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் - தவறி விழுந்து 30 வயது இளைஞர் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் குடிநீர் குழாய் பணிகளுக்காக சாலையின் நடுவில் தோண்டப்பட்ட பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்து 30 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரத்தை சேர்ந்தவர் பொன் இருளப்பன். 30 வயதான இவர், தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில், மனைவி சபரீஸ்வரியுடன் ஶ்ரீரெங்க பாளையம் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவுப் பணி முடிந்து வீட்டுக்கு வந்த பொன் இருளப்பன், நகருக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் டிபி மில்ஸ் சாலையில் சென்றுள்ளார். சாலையின் நடுவே தாமிரபரணி குடிநீர் குழாயில் இருந்த கசிவை நீக்குவதற்காக சுமார் 10 அடி ஆழம் மற்றும் 6 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

இருட்டில் சென்ற பொன் இருளப்பன் சாலையின் நடுவே இருந்த அந்தப் பள்ளத்தில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்துடன் விழுந்துள்ளார். இரவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் இவர் விழுந்தது வெளியே தெரியவில்லை. வீடு திரும்பாத கணவனை, மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தேடிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற பொத மக்கள் குழிக்குள் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்துப்பார்த்த போது இறந்து கிடந்தது பொன் இருளப்பன் என்பது தெரிய வந்தது. உறவினர்களுக்கு தகவல் அளித்த காவல் துறையினர் பொன் இருளப்பன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 4 வருடங்களாக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நகருக்கு உட்பட்ட பகுதி முழுவதும் தாமிரபரணி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களுக்காக குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. தோண்டப்படும் குழிகள் குறித்து முறையான அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நலையில் பெரிய அளவிலான குழி இருப்பது குறித்து முறையான அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததே இன்றைய விபத்துக்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குழியை சுற்றி நூல் அளவிற்கு சிறிய அளவிலான டேப் மட்டும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. காற்று பலமாக வீசினால் இந்த டேப் பறந்து விடும். இந்த அலட்சியப் போக்கினாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குழியை சுற்றி தடுப்பு பலகை அமைத்து, குழி இருப்பது குறித்து அறிவிப்பு இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. இளைஞர் உயிரும் பறிபோய் இருக்காது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குடிநீர்வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜாமணியிடம் கேட்ட போது, ரயில்வே மேம்பால பணிகளுக்காக விபத்து நடந்த சாலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மாதக் கணக்கில் நடக்கும் வேலை நடந்தால் தடுப்பு பலகைகள் வைக்கப்படும். ஆனால் கடந்த வாரம்தான் இந்த குழி தோண்டப்பட்டப்பட்டது. கசிவு சரி செய்யும் பணிகள் 80 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது. இன்னும் ஓரிரு நாளில் குழியை மூட எண்ணியிருந்த நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com