சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
சென்னை பள்ளிக்கரணை பரசுராம் நகரில் முனுருதின் என்பவர் வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பரசுராம் நகரை சேர்ந்தவர் முனுருதின். இவர் தனியார் காப்பீடு நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு கடலூர் சென்ற முனுருதின் இன்று காலை வீடு திரும்புயுள்ளார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பள்ளிகரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம் வின்சன்ட் தலைமையில் போலீசார் நிகழ்விடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரும் விசாரித்தார்.
முன்னதாக 100 சவரன் கொள்ளை போனதாக தெரிவித்த வீட்டின் உரிமையாளர் விசாரணையில் 30 சவரன் என தெரிவித்தார். சமீபத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை போகும் சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பாக்ரீ கொள்ளையர்களை பிடித்த பிறகு,கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகரணை போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பேரின் உருவம் கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.