3 வருட சிறை.. பாலகிருஷ்ண ரெட்டி விவகாரத்தில் அடுத்தது என்ன..?

3 வருட சிறை.. பாலகிருஷ்ண ரெட்டி விவகாரத்தில் அடுத்தது என்ன..?
3 வருட சிறை.. பாலகிருஷ்ண ரெட்டி விவகாரத்தில் அடுத்தது என்ன..?

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 1998-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கள்ளச்சாராய விற்பனை தலைவிரித்தாடுவதாகவும், அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தபோது, அரசுப் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள மீது கல்வீசி தாக்கியும், தீ வைத்தும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஓசூர் போலீசார் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது சட்டப்பிரிவுகள் 147, 148, 332, 353, 435, 307 ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதால் சென்னைக்கு மாற்றப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அந்த நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சாந்தி, பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தும், மற்றவர்களை விடுவித்தும் உத்தரவிட்டார். குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்று, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அதற்குள் மேல்முறையீடு செய்ய நீதிபதி அவகாசம் அளித்தார்.

தற்போது மேல்முறையீடு செய்யவே, 30 நாட்கள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை பெற்றதால் அவரின் அமைச்சர் பதவி பறிபோனதோடு எம்எல்ஏ பதவியையும் இழந்து விடுகிறார்.

இதனிடையே சிறப்பு நீதிமன்றத்திற்கு வெளியே வந்து பேசிய பாலகிருஷ்ண ரெட்டி, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார். ஒருவேளை சென்னை உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தாலோ, அல்லது ரத்து செய்தாலோ பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை தொடரலாம். இல்லையென்றால் அவர் எம்எல்ஏ என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும். அத்துடன் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் 21-ஆக அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com