புதுவையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் உடலுக்கு மூன்று பெண்கள் உரிமை கோரிய சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் மூன்று பெண்களை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் அழகுக் கலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பணி இடமாறுதலில் புதுவைக்குச் சென்ற அவர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது செல்ஃபோனைக் கைப்பற்றி அதிலிருந்த எண்களில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த 3 பெண்கள், அவரது மனைவி என்று கூறியதால் குழப்பம் ஏற்பட்டது. விசாரணையில் சத்யா என்ற பெண்ணை ராஜா திருமணம் செய்து அவருக்கு 2 பிள்ளைகள் இருப்பது தெரிய வந்தது. பின்பு பணி இடமாற்றலில் தேனிக்குச் சென்றபோது அங்கு தனலட்சுமி என்ற பெண்ணை மணந்து அவருக்கு இரண்டு பிள்ளைகளும், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது அங்கு காவ்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி குடும்பம் நடத்தியதும் தெரிய வந்தது.
ஒவ்வொரு இடத்திலும் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை பெண்களிடம் மறைத்து ராஜா திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது. மூன்றாவதாக காதலித்த காவ்யாவை குடும்பம் நடத்த புதுச்சேரிக்கு ராஜா அழைத்ததாகவும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததால் மனமுடைந்த ராஜா தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அவரது உடலுக்கு மூன்று பெண்களும் உரிமை கோரிய நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின் ராஜாவின் உடல் முதல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு இளைஞர் 3 பெண்களை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.