தமிழகத்தில் ஒரே நாளில் 3 செய்தியாளர்கள் கொரோனாவால் உயிரிழப்பு
தமிழகத்தில் ஒரேநாளில் செய்தியாளர்கள் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டி வலசைச் சேர்ந்தவர் நல்லதம்பி. கடந்த 25 ஆண்டுகளாக எடப்பாடி வட்டார செய்தியாளராக ஊடகத்துறையில் பணியாற்றி வந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளராக இருந்த நல்லதம்பிக்கு, கடந்த 18 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல, சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அச்சு ஊடக புகைப்படக் கலைஞர் விஜயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நாகராஜனும் கொரோனாவால் உயிரிழந்தார். குலசேகரம் அருகே அண்டூரைச் சேர்ந்த சேர்ந்த 39 வயதான நாகராஜன், தனியார் தொலைகாட்சியின் குமரி மாவட்ட செய்தியாளராக பணியாற்றினார். காய்ச்சல் காரணமாக நாகர்கோவில் - செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.