சிறுமி பீர் பாட்டில் முனையில் பாலியல் வன்கொடுமை..! தொடரும் அவலம்

 சிறுமி பீர் பாட்டில் முனையில் பாலியல் வன்கொடுமை..! தொடரும் அவலம்
 சிறுமி பீர் பாட்டில் முனையில் பாலியல் வன்கொடுமை..! தொடரும் அவலம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை பீர் பாட்டில் முனையில் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடி அருகே, பெற்றோரை இழந்த 12 வயது சிறுமி, உறவினர்கள் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்தச் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீட்டருகே பாலாற்று பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்றுப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த கண்ணன், பார்த்திபன், சந்துரு ஆகியோர் சிறுமியை தடுத்து நிறுத்தி, பீர்பாட்டிலை உடைத்து சிறுமியின் கழுத்தில் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து மறைவான இடத்திற்குச் சென்ற மூவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டிய மூவரும், சிறுமியின் உடைகளை தூக்கிவீசிவிட்டு தப்பியுள்ளனர்.

ஆடையின்றி வெளிவரமுடியாமல் தவித்த சிறுமி, சுடுகாட்டுப்பகுதியில் கிடைத்த ஆடைகளை அணிந்துகொண்டு வீட்டுக்கு வந்து தகவல் கூறியுள்ளார். சிறுமியின் உறவினர் அளித்த புகாரின்பேரில், கண்ணன், பார்த்திபன், சந்துரு ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் போது, சிறுமி உள்ள பகுதியில் பொதுக்கழிவறை பல மாதங்களாக பூட்டப்பட்டே கிடப்பதால் ஆற்றோரம் இயற்கை உபாதை‌ கழிக்கப்போன போது இந்தக் கொடுமை நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலரை தொடர்பு கொள்ள முயன்றபோது, செயல் அலுவலர் கடந்த 29 ஆம்தேதி ஒய்வு பெற்றதால், ‌தற்போது வரை யாரும் நியமிக்கப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப. சிவனருளிடம் கேட்டபோது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அப்பகுதியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். தற்போது பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலரை நியமித்து உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில், 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 வழக்குகளும் என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 7 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். தொடரும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com