கரூர்: கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

கரூர்: கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு
கரூர்: கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

கான்கிரீட் கழிவுநீர் தொட்டியில் இறக்கப்பட்ட கட்டிட தொழிலாளியும், அவரை காப்பாற்ற முயன்ற இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நீதிகேட்டு ஊர்மக்களும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கியுள்லனர்.

கரூரில் புதிய வீடொன்றுக்காக கான்கிரீட் கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதில் கான்கிரீட் அமைக்க பயன்படுத்தப்பட்ட மரச்சாரமொன்று சிக்கியிருந்திருக்கிறது. அதை அகற்றுவதற்காக, தான்தோன்றி மலை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மோகன்ராஜ் என்பவர் இறங்கியுள்ளார். அப்போது கழிவுநீர் தொட்டியிலேயே மயக்கம் அடைந்திருக்கிறார் மோகன்ராஜ். அவரை காப்பாற்றுவதற்காக, தோரணக்கல்பட்டியை சேர்ந்த சிவா மற்றும் சிவக்குமார் ஆகியோரும் இறங்கியுள்ளனர். ஆனால் மேலும் துன்பம் தரும் வகையில், மூன்று பேரும் மயக்கநிலை அடைந்தனர். இதைக்கண்ட கட்டிட தொழிலாளர்களும் அப்பகுதி பொதுமக்களும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், மயக்க நிலையிலிருந்து மூன்று பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் இறந்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற தான்தோன்றி மலை போலீசார், அங்கு கட்டிடப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களிடமும், கட்டிட உரிமையாளர் மற்றும் காண்ட்ராக்டரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதற்கட்ட விசாரணையில், ஒரு மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட அந்த கான்கிரீட் கழிவுநீர் தொட்டி, கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக பெய்த மழையால் இரண்டடி நீர் தேங்கி இருந்துள்ளது என்றும், தேங்கிய நீர் விஷவாயுவாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியான சூழலிலிருந்த அதில் அவர்கள் இறங்கியதால், அவர்களை விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையும் ஈடுபட்டு வருகின்றனர்.

3 பேர் உயிரிழந்த்து தொடர்பாக தனிதோன்றிமலை போலீசார் கட்டட உரிமையாளர் குணசேகரன், கொத்தனார் கார்த்தி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேரின் உறவினர்கள், இன்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு முதலமைச்சரின் நிவாரண நிதி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com