தகாத உறவில் ஈடுபட்ட கட்டடத் தொழிலாளிக்கு, பீரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதிக்குட்பட்ட நாயனுர் வனப்பகுதியில், அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கர்நாடகா பகுதிக்கு சென்று சத்யராஜ் பணிபுரிந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் வாணியம்பாடியை சேர்ந்த சத்யராஜ், விஜய்குமார், அசோக்குமார் ஆகியோர் கடந்த 10 வருடங்களாக கட்டட ஒப்பந்த தொழில் செய்துவரும் கனகராஜ் என்பவரிடம் வேலைப்பார்த்து வந்தது தெரியவந்தது. இதில் சத்யராஜ், கனகராஜ் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ், விஜய்குமாரையும் அசோக்குமாரையும் சேர்த்துக்கொண்டு பீரில் விஷம் கலந்து கொடுத்து சத்யராஜை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க சத்யராஜ் சடலத்தை வனப்பகுதியில் தூக்கி வீசிவிட்டு சென்றதாக மூவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.