பன்றி, டெங்கு காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் 29 பேர் பலி
தமிழகத்தில் இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலால் 17 பேர் உயிரிழந்திருப்பதும், டெங்கு காய்ச்சலில் 12 பேர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல்கள் காரணமாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள், சேலம், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் 74 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு 54 பேரும், பன்றிக்காய்ச்சல் அறிகுறியோடு 10க்கும் அதிகமானோரும் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதேபோல, சென்னை குன்றத்தூரில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்தார். குன்றத்தூர், கந்தசாமி நகரை சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி ஜெயா, கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் குரோம்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பன்றிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையடுத்து அவர் நந்தம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, ஜெயா உயிரிழந்தார். இந்நிலையில், தமிழகத்தில் பன்றிகாய்ச்சலால் இந்தாண்டு பாதிக்கப்பட்ட 1,020 பேரில் 17 பேர் உயிரிழந்திருப்பதாவும், 12 பேர் டெங்கு காய்ச்சலில் உயிரிழந்திருப்பதாகவும், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காய்ச்சலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.