தமிழகத்தில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 25 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, பலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி கார்த்திகேயன், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ், சென்னை மாநகராட்சியின் (கல்வி) துணை ஆணையராக டி.சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்திகுமார், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன், கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா ஆகியோர் உட்பட 25 பேர் துறைரீதியான காரணங்களுக்கான இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.