திருவண்ணாமலையில் அருவி முன்பு செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
வாணியம்பாடியை சேர்ந்தவர் மெக்கானிக் முரளி(22). இவரும் இவரது நண்பர் மணிகண்டன்(19) என்பவரும் திருவண்ணாமலையின் ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள பீமா அருவிக்கு சென்றுள்ளனர். அப்போது முரளி அருவி முன்பு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது முரளி நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. முரளியை காப்பாற்ற அவரது நண்பர் மணிகண்டன் அருவியில் குதித்தாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் மீட்டனர். எனினும் கிழே விழுந்ததில் முரளியின் தலையில் அடிப்பட்டதால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். மணிகண்டன் பலத்த காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக மணிகண்டன் காவல்துறையினரிடம் அளித்த தகவலில். “நானும் முரளியும் காலை 9.45 மணியளவில் பீமா அருவிக்கு வந்தோம். நாங்கள் அருவியில் குளிப்பதற்கு முன்பு ஒரு செல்ஃபி எடுக்கலாம் என்று நினைத்தோம். அப்போது முரளி ஒரு பாறை கல் மீது ஏறி நின்றான். அந்தச் சமயத்தில் கால் வழுக்கி அவன் கீழே விழுந்தான். அவனை பிடிக்க முயன்ற நானும் கால் தடுக்கி கீழே விழுந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.