ஒரே ஆண்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் தமிழக அரசு நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 58-இல் இருந்து 60ஆக உயர்த்தப்பட்டது. கொரோனா நிதி நெருக்கடி காரணமாக ஓய்வு பெறும் வயதை கடந்த அதிமுக அரசு உயர்த்தியது.
இந்நிலையில் 2022 – 23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஓய்வூதியத்திற்காக தமிழக அரசு 39 ஆயிரத்து 508 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு மொத்தமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் அரசுக்கு கூடுதலாக 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூடுதல் செலவு காரணமாக தமிழக அரசு நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில், இந்த நிதியாண்டில் அரசின் வருவாய் அதிகரித்து வருவதால் கூடுதல் ஓய்வூதிய பலன்களை வழங்கிவிடலாம் என்று அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.