“வெறிநாய்களால் வெளியே வரவே பயமாக இருக்கிறது” - கையில் தடியுடன் நடமாடும் கிராம மக்கள்
திருத்தனி அருகே வெறி நாய்கள் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், வீடுகளிலிருந்து வெளியில் வர பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு காலனியில் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தெருவில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு வெறிப்பிடித்ததாக தெரிகிறது. இதனால் நாய்கள் சிறுவர்கள் முதல் முதியவர் வரை அனைவரையும் விரட்டி விரட்டி கடித்து வருவதாக அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஐந்து நாட்களிம் மட்டும் முருகேசன் (50), மல்லிகா (42), லட்சுமி(25), காவ்யா (11), ராஜி(13), சரத்(14), கிளின்டன் ராஜ்(6), காமராஜ்(65), லட்சுமணன்(38). பிச்சம்மாள்(45) உட்பட 20க்கும் மேற்ப்பட்டோரை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளது. நாய் கடியால் படுகாயமடைந்தவர்கள் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றால், நாய் கடிக்கு மருந்து இல்லை என்று கூறி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலைகளில் நடந்து செல்வோரை வெறி நாய்கள் விரட்டி கடித்து வருவதால், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் உட்பட அனைவரும் கையில் தடியுடன்தான் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இருப்பினும் வெறி நாய்கள் பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் நாய் கடிக்கு அவசர சிகிச்சை பிரிவில் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.