\
கடலூர்: செவிலியர் அலட்சியத்தால் பெண் ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி

கடலூர்: செவிலியர் அலட்சியத்தால் பெண் ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி

கடலூர்: செவிலியர் அலட்சியத்தால் பெண் ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி
Published on

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் இருளர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி லட்சுமி(50). கட்டிட தொழிலாளியான இவர் இன்று காலை பெண்ணாடத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளார். அங்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தடுப்பூசியை போடுவதற்காக செவிலியரிடம் சென்று காத்திருந்தார். அப்போது செவிலியர் மற்றொருவரிடம் பேசிக்கொண்டே முதல் தடுப்பூசியை செலுத்தியதாகவும் மீண்டும் அதே பெண்மணிக்கு 2வது முறையாக தடுப்பூசியை செவிலியர் செலுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. தனக்கு ஊசி போட்டு விட்டதாக கூறியும் அதை காதில் வாங்காமல் மீண்டும் இரண்டாவது ஊசியை செவிலியர் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது மகன் ஐயப்பன் சம்பந்தப்பட்ட மருத்துவரை நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளார். அப்போது ஒரு ஊசி மட்டுமே செலுத்தியதாக செவிலியர் மற்றும் மருத்துவர் தெரிவித்தனர். ஆனால் ஊசியை செலுத்தி கொண்ட லட்சுமி தனக்கு இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டது என கையில் போடப்பட்ட ஊசியின் தழும்பை காட்டி விளக்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் லட்சுமிக்கு தலைமை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த சில பயனாளிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com